தேனி, டிச. 5: கோவையில் நடந்த உலக சாதனை தனித்திறமை போட்டியில் சிலம்பப் போட்டியில் சாதனை படைத்த தேனி நாடார் சரசுவதி பள்ளி மாணவியை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். கோவையில் கடந்த நவ. 29ம் தேதி உலக சாதனை தனித்திறமை போட்டிகள் நடந்தது. இதில் தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சோனாலி கலந்து கொண்டார். இவர் சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இம்மாணவி சிலம்பக்கலையுடன் யோகா, பரதம், ஸ்கேட்டிங் என பலகலைகளில் சிறந்து விளங்குவதையடுத்து, இம்மாணவியை நேற்று தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் ராஜமோகன், பள்ளி செயலாளர் லட்சுமணன், பள்ளி முதல்வர் கமலாருக்மணி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.