பழநி, டிச. 5: நீட் தேர்விற்கான விண்ணப்பங்களை பள்ளிகளிலேயே பதிவு செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் எனப்படும் போட்டி தேர்வினை கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் டிச.31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1400ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு கிராமப்புற ஏழை மாணவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், விண்ணபிக்க தனியார் மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, நீட் தேர்விற்கான விண்ணப்பங்களை பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறையை ஏற்படுத்த கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.