திருச்சி, டிச. 5: அந்தநல்லூர் ஒன்றியம், கோப்பு ஊராட்சியில் பயன்பாடில்லாத இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மண் சுவராலான பள்ளி கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளதால் அவ்வழியாக பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சத்துடனே கடந்து சென்று வருகின்றனர்.திருச்சி அருகே அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மண் சுவரால் எழுப்பப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடம் மட்டும் பழுதடைந்துள்ளதால் அந்த கட்டிடத்தில் வகுப்புகள் ஏதும் நடைபெறாமல் உள்ளது. தற்போது அந்த கட்டிடம் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளிக்கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருப்பதால் மழை காலத்தில் விஷ ஜந்துக்களின் குடியிருப்பாக மாறி உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பழுதாகி பயன்படாத பள்ளி கட்டிடத்தின் வழியாகத்தான் மாணவ, மாணவிகள் புதிய பள்ளி கட்டிடத்திற்கு சென்று வருகின்றனர். தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பழையமான மண் சுவர், மழைநீரில் கரைந்து அது அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் கட்டிடத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் இப்பள்ளிக்கு செல்லக்கூடிய பாதை 2 அடி அகலத்தில் குறுகி உள்ளதால் மாணவ, மாணவிகள் சென்று வருவதற்கு மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பயன்பாடின்றி உள்ள வகுப்பறை கட்டிடத்தை இடிக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கவில்லை.