திருச்சி, டிச.5: உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திருச்சி கலெக்டரிடம் அனைத்து கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். இதில் கையெழுத்திட அதிமுகவும், பா.ஜவும் மறுத்து விட்டது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தல் பற்றிய அறிவிப்பு 2ம் தேதி வெளியானதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்க திருச்சி கலெக்டர் சிவராசு அனைத்து கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனை கட்டத்தை நேற்று நடத்தினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூ, தேமுதிக, பா.ஜ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், கலெக்டர் சிவராசு அனைவரும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள், இரண்டு கட்ட தேர்தல் கூடாது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். அதுவும் மாநகரம், ஊரகம் என அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக மேற்கண்ட கட்சியினர் ஒரு மனு எழுதி கையெழுத்திட்டு கலெக்டரிடம் கொடுத்தனர்.