கும்பகோணம், டிச. 5: கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட்டின் இரும்பு கம்பி அறுந்தது. இதனால் ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் 10 கிலோ மீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சென்றனர்.கும்பகோணம் மாத்தி கேட் வழியாக சாக்கோட்டை, கொற்கை, நந்திவனம், மருதாநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லலாம். இதனால் மாத்தி கேட் சாலையில் 24 மணி நேரமும் பொதுமக்களின் நடமாட்டம் இருக்கும். மேலும் தினமதோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும். ரயில் வரும் நேரங்களில் மாத்தி ரயில்வே கேட்டை மூடினால் இருபுறங்களிலும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நிற்கும். பின்னர் ரயில் சென்ற பிறகு கேட்டை திறந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ரயில்வே கேட்டை கடக்க 30 நிமிடத்துக்கு மேலாகி விடும்.இந்நிலையில் நேற்று திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ரயில் கும்பகோணத்துக்கு மதியம் வந்தது. மாத்தி ரயில்வே கேட் அருகில் வரும்போது முன்கூட்டியே மாத்தி ரயில்வே கேட்டை ஊழியர் மூடினார். அப்போது திடீரென கேட்டை இழுக்கும் இரும்பு கம்பி அறுந்தது. பின்னர் லாவகமாக கேட்டை இறக்கி ஊழியர்கள் மூடினர்.ஆனால் அதன்பிறகு கேட்டை திறக்க முடியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் அனைத்து வாகனங்களும் சாக்கோட்டை வழியாகவும், முழையூர் வழியாகவும், மருதாநல்லுார் வழியாகவும் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கும்பகோணத்துக்கு வந்தனர். இரும்பு கம்பி அறுந்தது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு கேட் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.