புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இத்தருணத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க வயலில் தேங்கிய நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும். அதிக நாட்கள் வயலில் நீர் தேங்கியிருப்பின் தழை மற்றும் ஜிங்க் சத்துக்குறைபாடு ஏற்பட்டு இளம்பயிர்கள் இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாற வாய்ப்புண்டு. இதை போக்க, நீரை வடித்தவுடன் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி தெளித்திட வேண்டும். தண்டு உருவாகும்போதும் பூக்கும் பருவத்திலும் நீர் தேங்கி பயிர் பாதிக்கப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் நீரில், தெளிப்பிற்கு முந்தைய நாள் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலைவேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி தெளித்திட வேண்டும்.நீர் தேங்குவதால் பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்பட்டால் நீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கியிருப்பின் குருத்து ஈ, இலைச்சுருட்டு புழு, பச்சைத் தத்துப்பூச்சி போன்ற பூச்சிகளாலும் குலைநோய், இலையுறை கருகல் நோய் போன்ற நோய்களாலும் தாக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைக் கண்டறிந்து தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.