சூரியம்பாளையத்தில் தோல் ஆலைகளை அகற்ற கலெக்டரிடம் மனு

ஈரோடு, டிச. 5:  சூரியம்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தோல் ஆலைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் கேசவன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரியம்பாளையத்தில் பாலக்காட்டூர், தெய்வபுரம், இந்திரபுரம், கருப்பணகவுண்டன்புதூர், மராபாளையம், சிலோன் காலனி, தண்ணீர்பந்தல்பாளையம், சொட்டையாம்பாளையம், அம்பேத்கார் நகர், நரிப்பள்ளம், ஆர்.என். புதூர், வீரப்பண்ணாடி புதூர் ஆகிய பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 14 தோல் ஆலைகள் அமைந்துள்ளது. இந்த ஆலைகளினால் விஷத்தன்மை கொண்ட நச்சு காற்று வெளியேறி வருகிறது.  இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. மாசுபட்ட காற்றாலும், நீராலும் எங்கள் பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் பகுதிகளிலில் உள்ள நீரின் உப்புதன்மை அதிகரித்துள்ளதால், கால்நடைகளுக்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடிவதில்லை. இந்த தோல் ஆலைகளை அகற்ற 2005ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். எனவே, எங்களது பல ஆண்டு கோரிக்கையை ஏற்று தோல் ஆலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: