திருப்பத்தூர், டிச.5: திருப்பத்தூரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்த ஷேர் ஆட்டோக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூரின் சுற்று பகுதிகளான கந்திலி, புதுப்பேட்டை, ஜோலார்பேட்டை, விசமங்களம், மாடப்பள்ளி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் அதிக பயணிகளை ஏற்றி சென்று வருகின்றனர். மேலும், இந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பஸ் நிலையத்திலிருந்து மீனாட்சி தியேட்டர்- புதுப்பேட்டை சாலை வரை சாலை ஓரங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பால் நடந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் புதிய பஸ் நிலையம், மீனாட்சி நிலையம், புதுப்பேட்டை ரோடு, ஆசிரியர் நகர் போன்ற நகர பகுதிகளில் ஆட்டோ ஸ்டேண்டுகள் அமைத்து 10 முதல் 15 பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.