செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்

செங்கம், டிச.5: செங்கம் அடுத்த மேல்புழுதியூர், பக்ரிபாளையம் கிராம பொது மக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் உள்ளது மேல்புழுதியூர் மற்றும் பக்ரிபாளையம் கிராம ஊராட்சிகள். இந்த பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் கழிவுநீர் சாலையிலேயே ஓடுகிறது. மேலும், குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் சேறும், சகதியுமாக உள்ளது. அதேபோல் குடிநீர் சப்ளை முறையாக செய்வதில்லை. இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவது இல்லை என பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி பெண்கள் உட்பட ஏராளமானோர் நேற்று பெங்களூரு- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பிடிஓ நிர்மலா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்த பகுதியில் உள்ள குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தினை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: