திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான நேற்று இரவு வெள்ளி கற்பக விருட்சத்தில் அண்ணாமலையார் பவனி வந்தார். மாடவீதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் பகலில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் மேள, தாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் 4ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்தனர். அப்போது மழை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.