கால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்

திருப்போரூர், டிச.5:  சென்னையை ஒட்டிய வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய இரு கிராமங்களிலும் அஜீத் நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர், ரேணுகாம்பாள் நகர், சுசீலா நகர், நந்தனார் நகர், கேஎஸ்எஸ் நகர் உள்பட 50க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. இந்த மனைப்பிரிவுகளில் முறையான சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளே வந்த மழைநீர், வெளியேற முடியாமல் சாக்கடை போன்று தெருக்களில் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோயை பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாத்தங்குப்பம் பகுதி, முன்பு விவசாய நிலங்களாக இருந்தபோது உருவாக்கப்பட்ட மழைநீர் கால்வாய்கள், தற்போது குப்பை கொட்டும் இடங்களாக மாற்றப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதனால், மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் கேளம்பாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: