செய்யூர், டிச.5: செய்யூர் அருகே மேலப்பட்டு கிராமத்தில் குடியிருப்புகளுக்கு இடையே பராமரிப்பு இல்லாத குட்டையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குட்டைபோல் தேங்கியுள்ளது. அதனை சீரமைக்காத அதிகாரிகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. செய்யூர் வட்டம், லத்தூர் ஒன்றியம் சிறுங்குணம் ஊராட்சியில், மேலப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புதிய காலனி 2வது தெருவில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான குட்டை உள்ளது.அரசுக்கு சொந்தமான இந்த குட்டையை, அதே பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகள் குட்டையை முறையாக பராமரிக்காமல் விட்டதால்,, குப்பை கொட்டும் இடமாக மாறியது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், இந்தக் குட்டையில் சேருவதாக கூறப்படுகிறது.