செங்கல்பட்டு, டிச. 5: தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கேங்மேன் பணிக்கு, ஆட்கள் தேர்வு நடந்தது. இதில், உடல் தகுதி தேர்வு நேற்று செங்கல்பட்டில் நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நேற்று செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் துணை மின்நிலைய அலுவலகத்தில் நடந்தது. செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட 2088 பேர் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான நேர்முக தேர்வு, உடல்தகுதி தேர்வு நடைபெறுவதை சென்னை தெற்கு மண்டல தலைமை பொறியாளர் மணிவண்ணன், செங்கல்பட்டு மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சுரேந்திரன், செயற்பொறியாளர்கள் சிவராஜ், மனோகரன் உள்பட 40 அதிகாரிகள் பார்வையிட்டனர். முதல் நாள் நேர்முகத் தேர்வில் 200 பேர் கலந்து கொண்டனர். அப்போது, மின்கம்பம் ஏறுதல், மின் பாதைகள் சரிசெய்தல் ஆகிய பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதுபோன்று தேர்வுகள் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட மின்வாரிய தலைமை அலுவலங்களில் நடக்கிகறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.