குன்றத்தூர், டிச. 5: செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவில் வெறும் 30 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது என பொதுப்பணி துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் கூறினார். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக குன்றத்தூர் அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தது. இதனை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஏரியின் மொத்த நீரின் கொள்ளளவு, நீர்வரத்து ஆகிய விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ஏரியின் 19 மற்றும் 5 கண் மதகுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.