செம்பரம்பாக்கம் ஏரியில் 30 சதவீதம் தண்ணீர் மட்டுமே நிரம்பியது

குன்றத்தூர், டிச. 5: செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவில் வெறும் 30 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது என பொதுப்பணி துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் கூறினார். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக குன்றத்தூர் அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தது. இதனை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஏரியின் மொத்த நீரின் கொள்ளளவு, நீர்வரத்து ஆகிய விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ஏரியின் 19 மற்றும் 5 கண் மதகுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 615 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில், இதுவரை 1103 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே வந்துள்ளது. இது ஏரியின் மொத்த கொள்ளளவில் வெறும் 30 சதவீதமே. தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே, விரைவில் ஏரி நிரம்பும். அதன் மூலம் வரும் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏதுவாக இருக்கும். மேலும் மழை பெய்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, ஏரி தனது முழு கொள்ளவை எட்டினால், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

Related Stories: