இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் பலியாவதற்கு பராமரிப்பு இல்லாத சாலைகளே காரணம்

சென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி சாம்சன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87,812 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3535 பேர் பலியாகியுள்ளனர். ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளனர். என்று கூறப்பட்டிருந்தது. அப்போது, ‘‘கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், போக்குவரத்து விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், ‘‘இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல. சாலையின் தரமும், சாலையை சரிவர பராமரிக்காததும் காரணம். போக்குவரத்து விதிகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை சரியாக பராமரிப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: