நாமக்கல், டிச.4: கொல்லிமலை அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால், ஆகாய கங்கையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை,கடல் மட்டத்தில் இருந்து 4100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்லும்பாதை 70 கொண்டை ஊசி வளைவு களை கொண்டதாகும். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலையில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அரப்பளீஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
அரப்பளீஸ்வரர் கோயில் அருகில் இருந்து 1020 படிக்கட்டுகளை கடந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். ஆனால் அருவில் தண்ணீர் வெள்ளம் போல ஓடுவதால் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகில் கூட நெருங்க முடியவில்லை.கொல்லிமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொட்டி தீர்க்கும் கன மழையால் ஆகாயகங்கை ஆர்பரித்துள்ளது. தொடர் மழை காரணமாக ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் ஆகாய கங்கை ஆபத்தான பகுதியாகி மாறியுள்ளது. ஆகாயகங்கை ஆக்ரோஷமாக கொட்டும் நிலையில், இடி மின்னல் மழை, குளிர் என பல்வேறு மாற்றங்களை கொல்லிமலை கண்டுள்ளது.