கிருஷ்ணகிரியில் கேங்மேன் தேர்வில் 274 பேர் தேர்ச்சி

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரியில் நடந்த கேங்மேன் பதவிக்கான தேர்வில் 274 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு கடந்த 25ம் தேதி முதல் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், கேங்மேன் பணிக்கான தேர்வுக்கு, 3221 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இவர்களில் நாளொன்றுக்கு 202 பேர் வீதம் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். உடல் தகுதி தேர்வில், 40 அடி உயர மின்கம்பத்தில் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு ஏறி கம்பத்தின் முக்கால் பகுதியில் நிற்பதற்காக குச்சியை குறுக்காக கட்ட வேண்டும். பின்னர் அதன்மீது நின்று கிராக் ஆரம் பொருத்த வேண்டும். பின்னர் அங்கிருந்து கீழ் இறங்க வேண்டும். இவை அனைத்தும் 8 நிமிடத்தில் முடித்தால் முதல் தேர்வில் வெற்றி பெறுவார். இரண்டாவதாக, 2 நிமிடத்தில் மின் கம்பத்தில் கிரீப்பர் செட் மாற்ற வேண்டும்.

இதில், தேர்ச்சி பெற்றால், மூன்றாவதாக 32 கிலோ எடை கொண்ட கிராம் ஆரம் என்ற இரும்பைத் தூக்கிக் கொண்டு, 1 நிமிடத்தில் 100 மீட்டர் ஓட வேண்டும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனே தேர்ச்சிக்கான சான்று வழங்கப்படுகிறது. கடந்த 25 முதல் நேற்று வரை 1200 பேர் பங்கேற்றதில், 274 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை.இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாக்கன் கூறுகையில், கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு வீடியோ கேமராக்களைக் கொண்டு பதிவு செய்யப்படுகிறது. தேர்வர்களின் பாதுகாப்பிற்காக கம்பத்தைச் சுற்றிலும் வலை கட்டப்பட்டுள்ளது. கம்பத்தின் கீழே தேங்காய் நார்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் உள்ளது. தேர்வை, பாலக்கோடு செயற்பொறியாளர் சிவானந்தம் தலைமையில், 173 அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இத்தேர்வுகள் வரும் 12 ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் அதிக ஆட்கள் உடற்தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

Related Stories: