கிருஷ்ணகிரி, டிச.4: சூளகிரி அருகே பார்த்தக்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(58). இவர், அதே பகுதியில் காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மகன் மாது(14). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக மாது கடையில் இருந்தார். அப்போது, மாலை 6 மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாது மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமகிருஷ்ணன் சூளகிரி போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.