குறைபாடுகளற்ற சரியான விலை கொண்ட தரமான தயாரிப்புகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும்

திருச்சி, டிச.4: குறைபாடுகளற்ற சரியான விலை கொண்ட தரமான தயாரிப்புகளை குறித்த நேரத்தில் வழங்குவது வாடிக்கையாளர் மகிழ்ச்சியை உறுதி செய்கிறது என பெல் செயலாண்மை இயக்குனர் பேசினார்.திருச்சி பெல் நிறுவன வால்வுகள் துறை நிர்வாகக் அலுவலகத்தில் 2 நாள் வணிக கூட்டாளிகள் கூட்டம் நடந்தது. இதில் திருச்சி பெல் செயலாண்மை இயக்குநர் பத்மநாபன் பேசியதாவது: பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு தற்போதைய வணிக சூழ்நிலை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு முன்னேறும் சவால்களை உணர்த்துவதற்காகவும், திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பரஸ்பர பொறுப்புகள் குறித்த புரிதலைக் கொணரவும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பெல்லின் வெற்றியில் வணிக பங்காளிகள் ஆற்றிய முக்கிய பங்கை பாராட்ட வேண்டும். வளர்ச்சி வேகத்தை தக்க வைக்க விநியோக அட்டவணை மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றார்.

வால்வுகள் பொறியியல், தரம், நிதி மற்றும் நிறுவன வள திட்டமிடல் அதிகாரிகள் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினர். ரிசீவபிள்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிட்., (ஆர்.எக்ஸ்.ஐ.எல்) அதிகாரி ஒருவர் சமீபத்தில் தொடங்கப்பட்ட வர்த்தக பெறுதல் தள்ளுபடி அமைப்பு (டி.ஆர்.டி.எஸ்) குறித்தும் வழங்குநர்களுக்கு அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.முன்னதாக மூலோபாய மற்றும் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் வால்வுகள் துறைக்கான பொது மேலாளர் கணேசன் இந்த சந்திப்பைத் தொடங்கி வைத்தார். தர உறுதிமொழியை தரத்துறைக்கான பொது மேலாளர் ரவிசங்கரன் ஏற்புவித்தார். பல்வேறு வார்ப்புகள், போர்ஜிங்குகள் மற்றும் துணை ஒப்பந்த பங்காளிகளின் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: