பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் சேதமடைந்த வணிக வளாகம்

சிவகாசி, டிச. 4: சிவகாசி அருகே, திருத்தங்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் சேதமடைந்துள்ள வணிக வளாக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தங்கல் நகராட்சி அலுவலக வளாகத்தின் உட்புறத்தில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, 25 ஆண்டுகளுக்கு முன்பு வணிக வளாகம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் வணிக வளாக கடைகள் பயன்பாட்டில் இருந்து வந்தன. இக்கட்டிடம் நாளடைவில் பராமரிப்பு இன்றி சேதமடைந்தது. வணிக வளாகத்தை பராமரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் அனைத்து கடைகளும் சேதமடைந்து பயன்பாடற்று போனது. தற்போது சில கடைகள் மட்டும் நகராட்சி நிர்வாகம் ஸ்டோர் ரூமாக பயன்பட்டு வருகின்றது. கடைகளில் முன்புறம் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டுள்ளது. வரி செலுத்த, சான்றிதழ் பெற என பல்வேறு தேவைகளுக்கு தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு  நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இங்கு வருகின்ற அலுவலர்கள், பொது மக்கள் இதனைக் கடந்துதான் செல்ல வேண்டும். கட்டிடம் சேதமடைந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர இங்கு வருகிற சிலர் சேதமடைந்த கட்டடத்தின் அருகில் தங்களது டூவீலரை நிறுத்துகின்றனர். மேலும், சிலர் நிழலுக்கு கட்டிடத்தின் அருகில் ஒதுங்குகின்றனர். துப்புரவு பணிக்கூரிய பொருட்களை ஊழியர்கள் இங்குதான் வைத்து எடுக்கின்றனர். பெரிய மழை பெய்தால் கட்டடம் இடிந்து விழ வாய்ப்புள்ளது. மேலும், வணிக வளாகத்தின் மற்றொரு புறம் முட்தர்கள் நிறைந்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் அவ்வப்போது நடமாடுகிறது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: