ராஜபாளையம், டிச. 4: ராஜபாளையம் அருகே, பயன்பாடில்லா மகளிர் சுகாதார வளாகத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் கிராமம் உள்ளது. இங்கு கிழக்கு தெரு, மேற்கு தெரு, காலனி என சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டனர். குடிநீர், கழிப்பறை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. இப்பகுதியில் உள்ள பட்டியூர், சிதம்பராபுரம், நக்கனேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேந்த பொதுமக்கள் பயன்படுத்தப்படும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்நிலையில், தெற்குவெங்காநல்லூர் கிராமத்தில் பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கோயில் அருகே உள்ள சுகாதார வளாகம் இது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். ஊருக்குள் குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை. சிவன் கோயில் அருகே இருக்கும் ஒரே மகளிர் சுகாதார வளாகம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.