சிவகாசியில் சுற்றுவட்ட சாலைப்பணி 6 ஆண்டாக இழுத்தடிப்பு

சிவகாசி, டிச. 4: சிவகாசியில் 6 ஆண்டாக இழுத்தடிக்கப்படும் சுற்றுவட்டச் சாலைப் பணியை விரைந்து முடிக்க, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.   சிவகாசி நகரில் குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப சாலை போக்குவரத்து விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை தவிர்க்க கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.150 கோடியில் நகரைச் சுற்றிலும் சுற்றுவட்ட சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான நிலஅளவை பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது தனியார் மூலம் சாலை அமைய இருக்கும் இடங்களை சர்வே செய்து குறியீடுகள் செய்யப்பட்டன. அதன்பின் இந்த திட்டத்தை அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில், மீண்டும் சுற்று வட்ட சாலை பணிகளை துவங்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, விருதுநகர் சாலையில் வடமலாபுரத்தில் இருந்து கீழத்திருத்தங்கல், நாரணாபுரம், சுந்தர்ராஜபுரம், தெற்கு ஆனைக்குட்டம், கொங்கலாபுரம், பூலாவூரணி, நடுவபட்டி, பூவநாதபுரம், செங்கமலநாச்சியார்புரம் வழியாக சுமார் 40 மீ அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வருவாய்த்துறை ஆய்வாளர்கள், சர்வேயர்கள் மூலம் சாலை அமையவுள்ள நிலங்களை கையகப்படுத்தி, அவைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கீழ திருத்தங்கல், நாரணாபுரம் கிராமப்பகுதியில் உள்ள நிலங்கள் வருவாய் துறையினர் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுற்று வட்ட சாலை அமைய இருக்கும் 10 கிராமங்களிலும் நிலங்களை கையப்படுத்தி, அவைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 வருவாய் ஆய்வாளர்கள், 4 சர்வேயர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வருவாய்துறை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். நிலம் கையப்படுத்தும் பணி முடிந்ததும் சாலை அமைக்கும் பணிகளை  துவங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், பணிகள் மந்தகதியில் நடப்பதால் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சுற்று வட்ட சாலை அமைக்கம் பணியை விரைந்து செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: