கம்பம், டிச.4: கம்பத்தில் நேதாஜி ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மரங்களிலிருந்து ஆணிகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி, கல்லூரி மற்றும் பூச்சிமருந்து நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மரங்களில் அதிகளவில் ஆணி அடிக்கின்றனர். மரங்களில் ஆணிகள் அடிப்பதால் அதன் நுண் திசுக்களில் பாதிப்பு ஏற்பட்டு மரங்கள் வேகமாகப் பட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் ஆணிகள் அடிக்கப்பட்ட துளையில் பூஞ்சாணம், பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு, மரத்தின் ஆயுளும் குறைகிறது. எனவே மரத்தில் ஆணி அடிப்பதை தடுக்கும் விதமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில், கம்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களில் அறையப்பட்ட ஆணிகளை நேதாஜி ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரண்டு வந்து அகற்றினர். மரங்களில் ஆணி அகற்றிய இடத்தில் மஞ்சள், வேப்பஎண்ணெய் கலந்து பூசினர். நிகழ்ச்சிக்கு கவிஞர் பாரதன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் பொன்காட்சிக்கண்ணன், அலீம், செந்தில்நாதன், எஸ்ஐக்கள் கர்ணன், மணிகண்டன், சுதாகரன், நூலகர் மணிமுருகன், நந்தகுமார் மற்றும் கண்ணகி அறக்கட்டளையினர், நேதாஜி இல்லக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.