கம்பம், டிச.4: கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளியில் தாத்தா-பாட்டி தினவிழா கொண்டாடப்பட்டது. கனவுகளைத்தேடி பயணிக்கும் வாழ்வில், பேரக்குழந்தைகளை மட்டுமே கனவாக நினைத்து பார்க்கும் தாத்தா, பாட்டிகளை போற்றிக் கொண்டாடும் விதமாக கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளியில் “நலா மஹா மாதா 2019” என்ற பெயரில் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி பொறுப்பு முதல்வர் மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி முன்னிலை வகித்தனர். விழாவில், கலந்து கொண்ட தாத்தா, பாட்டிகள் தங்களது பேரன், பேத்திகளை உறங்க வைக்கவும், சாப்பிட வைக்கவும் பாடிய பாட்டு, கதை, பேரக்குழந்தைகளின் குறும்புச் செயல்கள் குறித்து கூறினர். பின்னர் தாத்தா, பாட்டிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்ற தாத்தா பாட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பள்ளி நிர்வாக அலுவலர் விக்னேஷ் நன்றி கூறினார்.