திருப்புவனம், டிச.4: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 77 ஆயிரத்து 429 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் ஊராட்சித்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி அரசியல் கட்சிகள் தவிர பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஒவ்வொரு ஊராட்சிக்கும் மத்தியஅரசு நேரடியாக நிதி வழங்கி வந்ததும் மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்தி வந்தது. உச்ச நீதிமன்றம் இம்மாதம் 13ம் தேதிக்குள் ஊராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி ஊரட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.