காரைக்குடி, டிச.4: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரி நகர் உள்பட 10 பகுதிகளில் சாலை உள்பட அடிப்படை வசதியில்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி நகராட்சிக்கு இணையாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இவ்ஊராட்சிக்கு உட்பட்ட சபரி நகர், கேவிஎஸ் நகர், செல்லப்பா நகர், ஜெய்ஹிந்த் நகர், உதயம் நகர், நியூகேவிஎஸ் நகர், சிவா நகர், சிவானந்தா நகர், கே.கே நகர் பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் எங்கும் சாலைகளே இல்லை. மண் சாலைகளாகவும், சாலை ஓரங்களில் பள்ளம், படுகுழிகளாகவும் உள்ளன. தெரு விளக்குகள் இருந்தும் எரியாத நிலையே தொடர்கிறது. குடிநீர் பிரச்சனை அதிகஅளவில் உள்ளது. தவிர குப்பை வாங்க வராததால் வீடுகளுக்கு முன்பு குப்பைகளை போட்டு மக்கள் எரித்து வருகின்றனர். கழிவுநீர் செல்ல முறையான வசதிகள் இல்லை. ஊராட்சி தலைவர் இருந்த வரையில் தெருவிளக்கு, குப்பை வாங்கும் பணி சரியாக நடந்து வந்தநிலையில் தற்போது அதிகாரிகளின் மெத்தன போக்கால் கண்டுகொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.