சிவகங்கை, டிச. 4: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல் எண் பதிவு செய்யும் பணி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் முதல் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் உறுதிபடுத்தும் திட்டம் செயல்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல் எண், இமெயில் முகவரி இடம் பெறுவது மற்றும் இரட்டை பதிவுகள் நீக்கம், முகவரி திருத்தம், புகைப்படம் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் இதன்மூலம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்பட்டது. சம்பந்தபட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸை வழங்கி ஆதார் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஆதார் அட்டை இல்லையெனில், ஆதார் அட்டை எடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள ரசீதின் ஜெராக்ஸ் மற்றும் செல் எண்ணையும் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி அளவில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் ஒன்றரை மாதங்கள் நடந்த இப்பணி மந்தமாக நடந்ததால் தொடர்ந்து தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.