சிவகங்கை நகரில் மழைநீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சிவகங்கை, டிச. 4:  சிவகங்கை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன. 12 ஆண்டுகளாகியும் திட்டம் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கழிவுநீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்து இடங்களிலும் இருந்தன. சில இடங்களில் 10 அடி அகலம் வரையில் இருந்த இக்கால்வாய்கள் அருகிலுள்ள தனியாரின் ஆக்கிரமிப்புகளால் தற்போது மிகச்சிறிய அளவிலான கால்வாய்களாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர், மழைநீர் சென்று வந்த கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் அடைபட்டு போயுள்ளதால் சிவகங்கை நகர் முழுவதும் பல இடங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து பிரதான சாலைகள், தெருக்களிலும் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபோல் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமலும் உள்ளதால் கால்வாய்க்குள் கிடக்கின்றன.

இக்கால்வாயில் அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகளும் தேங்கியிருப்பதால் கழிவுநீர் முற்றிலும் செல்ல முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையும் உள்ளது.

எனவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கால்வாய்களை மீட்கவும், கால்வாய்களை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘சிவகங்கையில் பாதாள சாக்கடை திட்ட குளறுபடியால் கழிவுநீர் செல்ல வழியில்லாத நிலையில் லேசான மழை பெய்தாலே சாலைகளில் மழைநீரோடு, கழிவுநீரும் சேர்ந்து செல்கிறது. இதுபோல் நகர்ப்பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நேருபஜார் பகுதியில் குப்பைகளும் சரிவர அள்ளப்படுவதில்லை. இதனால் கடும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. இப்பிரச்னைகளை களைய உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: