அரசு பள்ளிகளில் கொத்தடிமையாக தொகுப்பூதிய ஆசிரியர்கள்

பரமக்குடி, டிச.4: தமிழக அரசின் பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமையாசிரியர்கள், கொத்தடிமை போல வேலை வாங்கி வருவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழக அரசு கடந்த 2012ல் மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் பள்ளிகளில் பணியாற்றுவதற்கு தையல் பயிற்சி, கம்ப்யூட்டர், உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 16,546 சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.  இவர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் ரூ..7 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அவர்கள் வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணியாற்ற வேண்டும் என்ற நிபத்தனையில் நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய தொகுப்பூதிய ஆசிரியர்கள் மூன்று முழு நாட்கள் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருவதுடன், பள்ளிகளின் வெளி அலுவலக பணிகளுக்கு சென்று வர தலைமையாசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, பள்ளியிலிருந்து சென்றதாக ஆள் கணக்கு காட்டவும், சிறப்பு ஆசிரியர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

பள்ளிக்கு புத்தகம் வாங்குவது, சீருடைகள் வாங்குவது என மற்ற பணிகளை செய்யவேண்டும். இல்லையெனில் பள்ளிக்கு சிறப்பு ஆசிரியர் பணி தேலையில்லை என எழுதி கொடுத்து விடுவதாக மிரட்டும் தோரணையில் சில தலைமையாசிரியர்கள் நடந்து கொள்வதாக சிறப்பு ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே பள்ளி அலுவல் காரணமாக வெளியில் சென்றாலும், இவர்களுக்கு தனியாக போக்குவரத்து படி ஏதும் கொடுக்கப்படுவதில்லை.

தமிழக அரசு என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில், தலைமையாசிரியர்கள் தங்களை கொத்தடிமை போல் வேலை வாங்கினாலும், அதனை சகித்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஆகவே அரசு விதிமுறைகளின்படி வாரத்தில் அரை நாட்கள் மட்டும் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என சிறப்பு ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: