ஊட்டி, டிச. 4: ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மூழ்கிய காய்கறி தோட்டத்தில் மழை நீர் வற்றாமல் உள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 3வது முறையாக கேத்தி பாலாடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போதும் இப்பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதன்பின், கடந்த செப்டம்பர் மாதம் மழையின் போதும் இப்பகுதியில் மழை நீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் கேத்தி மற்றம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையாலும், காட்டேரி அணைக்கு செல்லும் நீரோடையில் உடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் விளை நிலத்திற்குள் புகுந்தது.