கோவை, டிச.4: கோவை வாலாங்குளத்தின் கரையில் குவிக்கப்பட்டு அழுகி கிடக்கும் ஆகாய தாமரையால் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஆகாய தாமரை அகற்றும் பணி நடக்கிறது. குளத்தின் மேற்கு பகுதியில் சுமார் 300 டன் அளவிற்கு ஆகாய தாமரைகள் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு கரைகளில் குவிக்கப்பட்டது. 2 மாதமாகியும் இந்த ஆகாய தாமரை கழிவுகள் அப்புறப்படுத்தப்படவில்லை. கரையில் கிடந்த அழுகிய கழிவுகள் மீண்டும் குளத்திற்கு சரிந்து விழுந்து கிடக்கிறது. கழிவுகளால் அந்த பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆகாய தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ரயில் பாதை அருகே ஆகாய தாமரைகள் அதிகளவு உள்ளது. இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.