திருமயம்.டிச.4: திருமயம் முக்கிய வீதி சாலைகளில் சேறும் சகதியுமாக மாறியதால் சாலையை கடக்க பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் திருமயம் முக்கியமானதாக உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமயத்தில் மேல்நிலைபள்ளி, தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள், அரசு மருத்துவ மனை, காவல்நிலையம் இருப்பதோடு இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பஸ் வசதி இருப்பதால் இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் திருமயம் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அதே சமயம் இங்குள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான திருமயம் கோட்டை கோயிலை கண்டுகளிக்க உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.