வேதாரண்யம், டிச.4: வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் உள்ள அரிச்சந்திராநதி, கள்ளமேட்டிலுள்ள அடப்பாற்றிலிருந்து கடலில் வெள்ளநீர் வடிவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தலைஞாயிறு ஒன்றியத்தில் ஆலங்குடி, மணக்குடி, பிரிஞ்சிமூளை, முதலியப்பன்கண்டி, வேட்டைக்காரனிருப்பு வழியாக கடலில் கலக்கும் அரிச்சந்திராநதியின் கள்ளிமேட்டில் அடப்பாறு வழியாக கடலில் கலக்கும் ஆற்றையும் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கீழ்காவேரிகண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர் முருகவேல், தங்கராசு, உதவிசெயற்பொறியாளர் கண்ணப்பன், பாண்டியன், உதவிப் பொறியாளர்கள் சண்முகம், கமலக்கண்ணன், கோவிந்தராசு, சாக்ரட்டீஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கூறியதாவது: கடந்த வாரம் பெய்த கனமழையால் ஆறு, குளம், குட்டைகள் நிறைந்துள்ளன. அரிச்சந்திரா மற்றும் அடப்பாறு பகுதிகளில் வெகுவாக வடிந்துகொண்டிருக்கிறது. ஆறுகளில் எவ்வித உடைப்பும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.