குளத்தூர், டிச. 4: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள வேடநத்தம், வெங்கடாசலபுரம், வள்ளிநாயகிபுரம், கொல்லம்பரம்பு, முள்ளூர், த.சுப்பையாபுரம், முத்துக்குமாரபுரம், வீரபாண்டியாபுரம், பனையூர், வேப்பலோடை, தருவைகுளம், வைப்பார், சூரங்குடி, வேம்பார், பூசனூர், புளியங்குளம், கெச்சிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழைக்கு முன்பாக அப்பகுதி விவசாயிகள் தங்களது மானாவரி விவசாய நிலங்களை உழுது கம்பு, சோளம், மிளகாய், உளுந்து சாகுபடி செய்திருந்தனர். இதனுடன் ஊடு பயிர்களாக வெங்காயம், மல்லி, பாகற்காய், அவரை, சூரியகாந்தி போன்றவைகளை விதைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். குளத்தூர் வட்டாரத்தில் மொத்தம் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்தனர். இதில் குளத்தூர் வடபாகம், தென்பாகம், கீழ் பாகம் பகுதிகளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பருவமழையும் கை கொடுத்ததால் பயிர்கள் அனைத்தும் ஓரளவு பருவத்திற்கு வளர்ச்சியடைந்து காய்பிடிக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதி வளர்ச்சியடைந்த பயிர்கள் தொடர்ந்து ஒருவாரமாக தண்ணீரிலே மிதப்பதால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகும் நிலைக்குள்ளாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.