வாலாஜாபாத், டிச.4: வாலாஜாபாத் பேரூராட்சியில், சைக்கிள் டயர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளருக்கு 2000 அபராதம் விதிக்கப்பட்டது. வாலாஜாபாத் பேருராட்சியின், 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பஸ் நிலையம், பஜார் வீதி, மார்க்கெட் உள்பட பல பகுதிகளில் உணவகங்கள், சாலையோரக் கடைகள், துணிக்கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தமிழக அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக, பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் ஊழியர்கள் வாலாஜாபாத் பஸ் நிலையம், ராஜவீதி உள்பட பல கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் உணவகங்கள், துணி கடைகள், தள்ளுவண்டி கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட சுமார் 4 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது மீறினால் சட்ட ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.