திருவெண்ணெய்நல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை

திருவெண்ணெய்நல்லூர், டிச. 4: திருவெண்ணெய்நல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம்  திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் கணேஷ் பாபு(27). புதுவை வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார்  நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சூரியா(20)வை 3 வருடமாக காதலித்து திருமணம் செய்து ள்ளார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சூரியா  திருமணத்திற்கு முன்பு நடிகர் சரத்குமார் வீட்டில்  இரண்டு வருடமாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

நேற்று காலை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்பாபு மனைவியை அடித்து கொலை செய்து படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூரியாவின் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சூரியாவின் கணவர் கணேஷ்பாபு, மாமியார் லட்சுமி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: