இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு அதிகம் தேவை

நெய்வேலி, டிச. 4:  “விமானவியலில் இந்தியாவின் மகத்தான சாதனைகளும் - மாணவர்களின் வருங்கால பங்களிப்பும்” என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நெய்வேலி லிக்னைட் அரங்கில் நடைபெற்றது. என்எல்சி சமூக பொறுப்புணர்வு முதன்மை பொது மேலாளர் மோகன் தலைமை தாங்கினார். ராணுவ விஞ்ஞானி டெல்லிபாபு கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவின் இலகுரக போர் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் அதன் சாதனைகளையும், விமானங்கள் பறப்பதற்கு உதவும் அறிவியல் வழிமுறைகளையும் மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு மாணவ, மாணவிகளின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதால் மத்திய அரசு சிறப்பு ஊதிய தொகை திட்டத்தை வழங்கி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில், என்எல்சி பள்ளிகள் உள்பட 14 பள்ளிகளில் செயல்படும் 33 துளிர் இல்ல மாணவர்கள் பங்கு பெற்றனர். என்எல்சி கல்வித்துறை செயலாளர் விநாயகமூர்த்தி, பொது மேலாளர் அப்துல் காதர், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: