நாகர்கோவில், டிச.4 : ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கான பண பலன்களை வழங்க கோரி, நெல்லையில் உள்ள போக்குவரத்து கழக கோட்ட அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட போவதாக அறிவித்து உள்ளனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நாகர்கோவில் மண்டல ஆலோசனை கூட்டம், நாகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் பிரான்சிஸ் செல்வராஜ் வரவேற்றார். கோவை மண்டல பொருளாளர் சந்திரசேகர், சென்னையை சேர்ந்த சிங்காரம் மற்றும் நாகர்கோவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 85 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எந்த பண பலன்களும் வழங்கப்பட வில்லை. ஜனவரி 2016 ல் இருந்து அகவிலைப்படி உயர்வு இல்லை. ஊதிய ஒப்பந்த சரத்துப்படி 2003 ல் இருந்து பென்சன் உயர்வு கிடையாது. பணியின் போது சரண்டர் செய்த விடுப்புக்கான பணம் போன்ற எந்த பண பலன்களும் இல்லை.