அரியலூர், டிச. 3: நெற்பயிரில் ஆனைக்கொம்பன் தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக நெல்லில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈ வகையை சார்ந்த இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இந்த ஈ இருந்தால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். கிளைப்புகள் வெண்மையாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவோ குழல் போன்று வெங்காய இலையை போல தோன்றும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்று இருப்பதால் இதை ஆனைக்கொம்பன் என்றழைப்பர். தாய் ஈக்கள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படும். இந்த பூச்சிகள் சராசரியாக 150 முட்டைகள் வரை இலைகளில் இடும். தாள்களின் மேல்புறமும், தேங்கிய தணணீரிலும் இடும். இதன் வாழ்க்கை சுழற்சி 20 முதல் 25 நாட்களாகும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.