கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம் நாளில் வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் பவனி

திருவண்ணாமலை, டிச.3: அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவத்தையொட்டி தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரும், வெள்ளி இந்திர வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம்நாள் உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சுவாமி தரிசனத்துக்காக நேற்று அதிகாலையில் இருந்தே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து காலை 11 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் இருந்து காலை உற்சவம் ெதாடங்கியது. மங்கள இசையும், சங்கொலியும் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளும் காட்சி திதி கோலமாகும். சூரியன், சந்திரன் இயக்கத்தால் உலகம் நிலைத்துள்ளது என்பதை உணர்த்துவது திருவீதி உலா வாகனத்தின் தத்துவமாகும். அனைத்து உயிர்களையும், அண்ட சராசரங்களையும் காக்கும் இறைவனாகிய பரம்பொருள், சூரிய, சந்திர கோள்களுக்கு இடையே ஞானம் பெறும் தீச்சுடராக விளங்குவதால் இரவும், பகலும் தட்ப, வெட்பமும் உண்டாகிறது என்பதே திதி கோலத்தின் உட்பொருள் ஆகும்.

ெதாடர்ந்து இரவு 10 மணியளவில் 2ம் நாள் தீபவிழா இரவு உற்சவம் விமரிசையாக நடந்தது. அதையொட்டி திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட பஞ்சமூர்த்திகள் 3ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் ராஜகோபுரம் எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாடவீதியில் வழிநெடுக பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டு நின்று பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தனர்.

Related Stories: