அரக்கோணம், டிச.1: அரக்கோணம் அருகே செல்லியம்மன் கோயிலில் ₹1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணம் அடுத்த செய்யூர் கிராமத்தில் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர், பெண் பூசாரி இரவு கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் அவ்வழியாக வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்திலிருந்த தாலி, பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் என மொத்தம் ₹1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை இக்கோயிலில் 3 முறை திருட்டுபோனது. ஆனால், இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்மநபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.