கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மோதல் ஆசிட் வீசியதில் விஏஓ, போலீஸ்காரர் படுகாயம்

திருவண்ணாமலை, டிச. 1: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆசிட் வீசியதில் விஏஓ மற்றும் கியூ பிரிவு போலீஸ் ஏட்டு ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை உண்ணாமலை நகரை சேர்ந்தவர் பால்(42). இவர் திருவண்ணாமலை கியூ பிரிவு போலீசில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஞானசுந்தரி(33). மாமியார் விமலா. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் விமலா ஆர்ஐயாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கிளிப்பட்டு கிராமத்தில் விஏஓவாக பணியாற்றும் சிவக்குமார்(30), என்பவர் விமலாவை வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு செல்வாராம். அப்போது விமலாவின் மகள் ஞானசுந்தரிக்கும், சிவக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கடந்த ஆண்டு திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு பின்னரும் சிவக்குமார், ஞானசுந்தரிக்கு தொல்லை கொடுத்து வந்தாராம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பால் பணிக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த விஏஓ சிவக்குமார், ஞானசுந்தரியிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அன்று இரவு வீடு திரும்பிய பாலுக்கு, சிவக்குமார் தகராறு செய்தது குறித்து தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், நள்ளிரவு 12 மணியளவில் தனது மாமியார் விமலாவுடன் திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள சிவக்குமார் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டாராம். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில், இருவரும் ஆசிட் வீசியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் முகம், கை, கால்கள் வெந்து சிவக்குமார் அலறித்துடித்தார். அதேபோல் இச்சம்பவத்தில் பாலின் மார்பு, கை, கால்கள் மீதும் ஆசிட் தெறித்தது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு 2 பேரும் மாற்றப்பட்டனர். இதுகுறித்து, விஏஓ சிவக்குமார் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் அளித்த புகாரில், கியூ பிரிவு போலீசில் ஏட்டாக பணியாற்றும் பால் தகராறின்போது அவர் கொண்டுவந்த ஆசிட்டை என் மீது ஊற்றினார் என்று புகார் அளித்துள்ளார்.

அதேபோல், போலீசில் ஏட்டு பால் அளித்த புகாரில், விஏஓ சிவக்குமார் வீட்டிற்கு சென்று தகராறு குறித்து தட்டிக்கேட்டபோது அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து என் மீது ஊற்ற முயன்றார். அப்போது தடுத்ததில் இரண்டு பேர் மீதும் ஆசிட் தெறித்தது என்று குறிப்பிட்டுள்ளதாக போலீசார் கூறினர். இதுகுறித்த, தனித்தனி புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார் மீது கள்ளக்காதல் தகராறு தொடர்பான வழக்கு ஏற்கனவே வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் விஏஓ சிவக்குமாரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: