திருப்புத்தூர் நூலகத்தில் தேசிய நூலக வார விழா

திருப்புத்தூர், நவ.19: திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் 52வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு எழுத்தாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். கிளை நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் முதல் நிகழ்ச்சியாக மறைந்த மூத்த எழுத்தாளர் ரிஷிகேஷனுக்கு, சித்தர் பீடம் மாரிமுத்து, நுகர்வோர் சங்க தலைவர் கணபதி, புரவலர் ஞானமுத்தன், பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து எழுத்தாளர் ஈஸ்வரன் புதிய புரவலராக தன்னை இணைத்துக்கொண்டார். “கேள்விக்குறிகள்” எனும் தலைப்பில் பேராசிரியை சுகன்யா, சுபா வீரபாண்டியன், ஆசிரியை லட்சுமி, வித்யா கணபதி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் சந்திரகாந்தன், குறும்பட இயக்குனர் ரவிச்சந்திரன், வைகைபாரதி, வாஹித் மற்றும் ஜோதி இளைஞர் மன்றத்தை சேர்ந்த சந்தோஷ், பிரபாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் நூலகர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.  விழா ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் குணசேகரன், நாராயணன், ஆகியோர் செய்திருந்தனர். பொதிகை கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Related Stories: