மொடக்குறிச்சி, நவ. 19: உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டுமென மொடக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொ.ம.தே.க. முடிவு செய்துள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி கலந்துகொண்டு, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் கொ.ம.தே.க. சார்பில் போட்டியிடுவது குறித்தும் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் கொ.ம.தே.க போட்டியிடுவது எனவும், உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த பதவிகளை கேட்டுப் பெறுவது என்பதை கூட்டணிக் கட்சியுடன் பேசுவதற்கான குழு அமைக்கப்பட்டது.