திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. 7ம் நாள் விழாவில், பஞ்சரதங்கள் பவனி நடைபெறும். விழாவின் நிறைவாக 10ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும்.இந்நிலையில், அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறும் மகா தேரோட்ட ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் நடந்தது. அதில், தேரோட்டத்தின் போது தேர் அச்சு இயக்கம் மற்றும் கட்டை போடும் பணியில் ஈடுபடும் சேவைப்பணியில் ஈடுபடும் சமுகத்தினர் கலந்து கொண்டனர்.தேர் திருவிழாவின் போது, விநாயகர் தேர், முருகர் தேர், மகா ரதம், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய பஞ்சரதங்களும் அடுத்தடுத்து மாட வீதியில் வலம் வருவதால், தேரோடும் வீதியை முறையாக புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.