முத்துவாஞ்சேரி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவு: வீணாக வழிந்தோடும் தண்ணீர்

தா.பழூர், நவ. 14: முத்துவாஞ்சேரி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துவாஞ்சேரி கிராமத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் முத்துவாஞ்சேரி- குணமங்கலம் இடைபட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் முத்துவாஞ்சேரி அருகே பாலம் கட்டுவதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பால வேலை முடிவடையும் தருணத்தில் இருப்பதால் விக்கிரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளுக்கு குடிநீருக்காக அனுப்பப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திறக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் சாலையோரம் காற்று போக்கி வழியாக அதிகப்படியான நீர் வீணாகி ஓடுகிறது. இதனால் அருகில் உள்ள 2 குட்டைகளில் நீர் நிரம்பி வருகின்றன.மேலும் பொதுமக்கள் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரின்றி உப்பு தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் ஆற்று நீரை குடிப்பதற்கு ஏதுவாக இருப்பதாகவும் போரில் இருந்து வரக்கூடிய தண்ணீரானது சுண்ணாம்புக்கல் கலந்து வருவதால் இப்பகுதியில் அதிகப்படியான சிறுநீரக கல் அடைப்பால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வீணாகும் நீரை சரி செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: