பள்ளியக்ரஹாரம் வழியாக செல்லாவிட்டால் மறியல்

கும்பகோணம், நவ. 14: கும்பகோணம் மார்க்கமாக வருபவர்கள் அரியலூர், திருவையாறு, சேலம், பெரம்பலூர், கல்லணை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் பள்ளியக்ரஹாரம் பேருந்து நிறுத்ததில் இறங்கி எதிர்புறம் வரும் பேருந்துகளில் ஏறி செல்வர். அதேபோல் அரியலூர், திருவையாறு உள்ளிட்ட ஊர்களிலிருந்து வருபவர்கள் கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் பள்ளியக்ரஹாரத்தில் இறங்கி செல்ல வேண்டும். தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், உறவினர்களின் வீட்டுக்கு செல்பவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளியக்ரஹாரத்தில் இறங்கி சென்று வருகின்றனர்.

இதனால் பள்ளியக்ரஹாரம் பகுதி பயணிகளுக்கு மிக முக்கியமான ஊராகவுள்ளது.

இந்நிலையில் சென்னை, கும்பகோணம் வழியாக தஞ்சைக்கு வரும் பேருந்துகள் பைபாஸ் ரவுண்டானா வழியாக பள்ளியக்ரஹாரம் சென்று தஞ்சைக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பள்ளியக்ரஹாரம் வழியாக செல்லாமல் பைபாஸ் வழியாக சென்று விடுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பைபாஸ் சாலையில் இறங்கி 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளியக்ரஹாரத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் மூதாட்டியுடன் வந்த இளம்பெண்ணை பைபாஸ் சாலையில் இறக்கி விட்டனர். அவர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் அங்கிருந்து நடந்து சென்றனர்.

எனவே கும்பகோணத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளையும் பைபாஸ் வழியாக செல்லாமல் பள்ளியக்ரஹாரம் வழியாக செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: