முருகன் கோயில்களில் கார்த்திகை விழா

வேதாரண்யம், நவ.14: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதுபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்பட பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது. இங்கு சுப்பிரமணிய சுவாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களைக் கொண்ட குழந்தை முகத்துடன் அமைந்துள்ளது. ஒரு கையில் அபயகஸ்தம், மற்ற கைகளில் அமிர்தகலசம், வட்சிராயுதம், சக்திகஸ்தம், பத்மம், நீலோத்பலம் ஆகியவைகளைக் கொண்டு தேவமயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பின்பு விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன்கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சீர்காழி: சீர்காழி அருகே வைதீஸ்வரன் கோயிலில் தையல் நாயகி அம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோவிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். புகழ் பெற்ற வைத்தியநாதசுவாமி கோயிலில் நேற்று கார்த்திகை விழாவை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இளைய சன்னிதானம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஏற்பாடுகளை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தன.

Related Stories: