மயிலாடுதுறை, நவ.14: மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் லாசர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர், நாகை மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உட்பட பலர் பேசினர். மாநில தலைவர் லாசர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறிவருகிறார். ஆனால் பல பொருளாதார வல்லூனர்கள் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது குறித்து தினந்தோறும் கூறி வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சியால் கிராமப்புற பொருளாதாரம், ஏழை எளிய மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது. கிராமப்புற தொழிலாளர்கள் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாய் கிடைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். நூறுநாள் வேலைதிட்டத்திற்கு 5 ஆயிரம்கோடி மத்திய அரசு நிதிஒதுக்கீடு செய்தால் அதில் 4 ஆயிரம் கோடியை கட்டுமான பணிகளுக்கு மாநில அரசு நிதிஒதுக்குகிறது. இதனால் வேலைவாய்பு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நூறுநாள் வேலைதிட்டத்தில் 20 முதல் 30 நாட்கள்தான் வேலை வழங்கப்படுகிறது.