30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 3 வது நாளாக போராட்டம்

திருவாரூர், நவ.14: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை எடை குறையாமல் கடை விற்பனையாளர்கள் முன்னிலையில் எடை வைத்து வழங்க வேண்டும், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவப் படிப்பினை உயர்த்தி வழங்க வேண்டும், பணிவரன்முறை செய்யப்படாத ஊழியர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும், நியாய விலை கடைகளுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் மற்றும் 21 மாத ஊதிய நிழுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் நீண்ட காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கடந்த 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தாங்கள் அறிவித்தவாறு நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தினை துவக்கியுள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 3 வது நாளாக இந்த வேலை நிறுத்த போரட்டமானது தொடர்ந்ததால் மொத்தமுள்ள 693 நியாயவிலை கடைகளில் 350க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கவில்லை. இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் 2வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஹரி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் மற்றும் பொறுப்பாளர்கள் வேலாயுதம், முருகானந்தம், தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: